கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம்
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து ரத்து செய்ய வேண்டும் என முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அந்த மனுவில், "வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கதல்ல. மேலும் மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்று நீதிபதி தனது விரிவான உத்தரவில் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நீதிபதி தெரிவித்துள்ள இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் சட்ட விதிகளை மீறிய செயலாக உள்ளது. உச்ச நீதிமன்றம் கடந்த 2000-ம் ஆண்டு மேலவளவு வழக்கில் இதேபோன்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இருநீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ததை" மனுவில் மேற்கோள் காட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி,மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் முறையிட்டார். வேறொரு நாளில் முறையிடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in