Published : 05 Nov 2016 02:28 PM
Last Updated : 05 Nov 2016 02:28 PM

தமிழக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது ஓபிஎஸ் கடமை: ஸ்டாலின்

பொதுமக்களின் உயிரச்சத்தைப் போக்கி, சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடமை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக அரசு முடங்கிக் கிடக்கும் நிலையில், கொலை-கொள்ளை-வன்முறை போன்ற சட்டவிரோதச் செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் தலைநகர் சென்னையில் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி நேரத்தில் கூட கண்ணகி நகர் பகுதியில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மூவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம் கஞ்சா வியாபாரம் தொடர்பான மோதல்கள் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இளைஞர்களிடையே வன்முறையும் சட்டவிரோத செயல்பாடுகளும் அதிகரித்து அது கொலையில் முடிகிற நிலை ஒருபுறமிருக்க, மூத்த குடிமக்கள் மீதான தாக்குதல்களும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன.

வீடுகளில் தனியாக இருக்கும் மூத்த குடிமக்களை குறிவைத்து கொலை செய்வது, கொள்ளையடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் சென்னை தியாகராயநகரில் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்மணியான சாந்தி படுகொலை செய்யப்பட்டிருப்பதும், அந்தக் கொலை தொடர்பாக காவலாளி கைது செய்யப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு சான்றாகும். சாந்தியைத் தொடர்ந்து இன்னொரு பெண்மணியும் அதே பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் ''தமிழகத்தில் 162 மூத்த குடிமக்கள் கொலை, 71 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல்கள், 88 கொள்ளைகள், 192 நம்பிக்கை மோசடி குற்றங்கள் என்பன உள்ளிட்ட 1969 குற்றங்கள் மூத்த குடிமக்களுக்கு எதிராக நடந்திருக்கிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் கழகம் ஆட்சியிலிருந்த போது, மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டம்- 2009 கொண்டு வரப்பட்டு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்தச் சட்டத்தின் முக்கிய அம்சமே, ''மூத்த குடிமக்களின் உயிரையும், உடமைகளையும் காக்கும் பொறுப்பு மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாநகரங்களைப் பொறுத்தமட்டில் போலீஸ் கமிஷனரிடமும் இருக்கிறது'' என்பதுதான். இந்த சட்டத்தின்படி, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மூத்த குடிமக்கள் குறித்த பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்; அந்த காவல் நிலைய எல்லையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஒருவருடன் இணைந்து காவல் நிலைய அதிகாரிகள் தனியாக வசிக்கும் முதியோரை மாதத்தில் ஒருமுறையாவது சென்று சந்திக்க வேண்டும்.

மூத்த குடிமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மூத்த குடிமக்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அடிக்கடி ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய வேண்டும்; மூத்த குடிமக்களுக்கு ஹெல்ப் லைன் தொலை பேசி உருவாக்கப்பட வேண்டும்; இது குறித்து மாநில அளவில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் அவ்வப்போது அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

திமுக ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்றைய அரசு சரியாகக் கடைப்பிடிக்காத காரணத்தால் மூத்த குடிமக்கள் அதிலும் குறிப்பாக வயதான பெண்மணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, பணம்-நகை ஆகியவை கொள்ளையடிக்கப்படுவதுடன் அவர்கள் கொலையும் செய்யப்படுகின்றனர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்குட்பட்ட மக்கீஸ்கார்டனைச் சேர்ந்த தனலட்சுமி என்ற 48 வயது பெண்மணி கொலை செய்யப்பட்டு, பாதி எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநகரமாக சென்னை உருவாகி வருகிறது. அண்மை நாட்களில் நடந்து வரும் தொடர்ச்சியான கொலைகள், சென்னையில் வசிப்போரை அச்சமடைய வைத்துள்ளது.

முதல்வர் பூரண குணமாகியுள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும், அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நாளை அவரே தீர்மானிப்பார் என்றும் அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையின் தலைவரே பேட்டியளித்துள்ள நிலையில், தலைநகரத்திலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் சீரழிந்து கொண்டிருக்கும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் கடமை, முதல்வரிடமிருந்த உள்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கும் நிதியமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கிறது.

மூத்த குடிமக்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோர் தொடர்ந்து கொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து, பொதுமக்களின் உயிர் அச்சத்தைப் போக்கும் வகையில் காவல்துறையின் பணிகளை முடுக்கிவிட வேண்டிய பணியை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x