Published : 15 Sep 2022 10:10 PM
Last Updated : 15 Sep 2022 10:10 PM

“ரெய்டை பார்த்து சந்தோஷப்படவில்லை; பழைய நண்பர்கள் நீங்கள்” - டிடிவி தினகரன்

படவிளக்கம்: திருப்பூரில் இன்றிரவு நடந்த அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர், கூட்டத்தில் பங்கேற்றோர். 

திருப்பூர்: இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் ரெய்டை பார்த்து நாங்கள் சந்தோஷப்படவில்லை, ஏனென்றால் பழைய நண்பர்கள் நீங்கள் என அண்ணா பிறந்தநாள் விழாவில் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அண்ணாவின் 114-வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் யூனியன் மில் சாலையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: அண்ணா இல்லையென்றால், தமிழகத்தில் சமூகநீதி கிடைத்திருக்காது. அண்ணா உருவாக்கிய சமுதாய புரட்சியால் தான், தமிழகத்தில் சாமானியர்களும் முதல்வராக முடிகிறது. ’எதையும் தாங்கும் வேண்டும் இதயம் வேண்டும்’ என்றார் அண்ணா.

ஒரு கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தாயுள்ளத்தோடு இருக்க வேண்டும் என்று அவர் சொல்லி இருக்கிறார். 1934-ம் ஆண்டு அண்ணாவும், தந்தை பெரியாரும் முதல்முறையாக சந்தித்த மண் தான், இந்த திருப்பூர். நாகரீகமான அரசியலுக்கு சொந்தக்காரர் அண்ணா. அவர் உருவாக்கிய தம்பிகள் தான், இன்றைக்கு வரை திராவிட இயக்கங்களை நடத்தி வருகிறார்கள். அண்ணாவின் கொள்கைகளை சாதாரண மக்களுக்கும், பட்டிதொட்டிக்கும் எடுத்து சென்ற பெருமை எம்ஜிஆரையே சேரும்.

ஜெயலலிதாவின் தொண்டர்களாகிய மாபெரும் படை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு உண்டு. தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திமுகவை இழுத்துமூடிவிட்டு வர வேண்டிய இடத்துக்கு வந்துவிடுவார். திமுக ஆட்சி கவிழ, மின் கட்டணம் போதும். திமுகவுக்கு செந்தில்பாலாஜி போல், பழனிசாமியை சுற்றி சிலர் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்திருந்தார். மின் கட்டண உயர்வால், சாதாரண மக்களில் இருந்து, தொழிலாளர்கள் என அனைவரும் இன்றைக்கு பாதிக்கப்படுகிறார்கள். சொத்துவரி, மின் கட்டணம் உயர்வு இப்படி, மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா? ஹிட்லரை தாண்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். பல்வேறு நலத்திட்டங்கள் முடங்கிவிட்டது. கருணாநிதியை மிஞ்சிவிட்டார் மு.க.ஸ்டாலின். அவர்களது குடும்பம், மீண்டும் ஆரம்பித்துவிட்டது. திரையுலகில், அனைத்து படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்தான் வெளியிடுகிறது.

மேடையில் குழந்தை போல் தவழ்ந்து வந்து பதவி பெற்றவர் பழனிசாமி.இன்றைக்கு எப்படி இருக்கிறார்? ஆர்.கே நகர் தேர்தலில் எனக்கு வாக்கு சேகரிக்க வந்த பழனிசாமி, அடுத்த 2 மாதத்தில் நீ யாரென்று என்னை கேட்கிறார். ஸ்டாலினை பார்க்க அதிமுகவில் கும்பல் ஒன்று முயற்சித்து கொண்டிருக்கிறது. நான் வேண்டுமானால் புகைப்பட ஆதாரத்துடன் சொல்வேன். கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டித்தேன் திருந்தவில்லை. இப்போது அனுபவிக்கிறார்கள். எடப்பாடி நகராட்சியில் கூட பழனிசாமியால் ஜெயிக்கமுடியவில்லை. மக்கள் எங்களை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளனர்.

மீண்டும் அதிமுக ஆட்சி அமையாமல் இருக்க காரணமே, 100 சதவீதம் பழனிசாமி தான். கொங்கு மண்டலத்தில் மட்டும்தான் அதிமுக உள்ளது. இன்றைக்கு அதிமுக வட்டார கட்சியாக சுருங்கிவிட்டது. மக்களின் பல ஆயிரம் கோடி வரிப்பணத்தை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டால், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விடாது. தப்பு செய்தவர்கள், துரோகம் செய்தவர்கள் நம்மை கண்டு பயப்படுகிறார்கள். எங்களை பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்தோம்.

இன்றைக்கு ரெய்டு நடக்கிறது. நாங்கள் அதை பார்த்து சந்தோஷம் அடையவில்லை. பழைய நண்பர்கள் நீங்கள். இனியாவது திருந்துங்கள். பணம் மட்டும் போதாது. உண்மையை உணர்ந்து யதார்த்தத்துக்கு வாருங்கள். ஒரு தாய் மக்களாக இருந்தோம். இன்றைக்கு தனியாக உள்ளோம்" இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பொதுக்கூட்டத்தில் அமமுகவின் தொழிற்சங்க கொடியை அறிமுகம் செய்து வைத்தார். கூட்டத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x