முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 436 ஆவணங்கள் ஆய்வு

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட 436 ஆவணங்கள் ஆய்வு
Updated on
1 min read

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் ஊரகவளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.

2015 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல, 2020-ம் ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர், தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்குவதற்கு அத்தியாவசிய சான்றினை முறைகேடாக வழங்கியது தொடர்பாக அவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய 31 இடங்களில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.3.98 லட்சம், வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள், தங்கம், வெள்ளி நகைகள், 2 வங்கி பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.

விஜயபாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய 13 இடங்களில் நடந்த சோதனையின்போது, ரூ.18.37 லட்சம் ரொக்கம், 120 ஆவணங்கள், 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அடுத்தகட்ட நடவடிக்கையாக இருவர் தொடர்புடைய இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட436 ஆவணங்களில் இருப்பது என்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், வங்கி பெட்டகத்தில் என்னென்ன வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அறிவதற்காக, அவற்றை விரைவில் திறந்து பார்க்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறும்போது, “பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. தேவைப்பட்டால் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், அவர்களது தொடர்பில் உள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பி, நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்வோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in