Published : 14 Sep 2022 05:42 PM
Last Updated : 14 Sep 2022 05:42 PM

மதமாற்ற புரளியைக் கிளப்பி சிறுபான்மையினர்களை பொது எதிரிகளாக கட்டமைக்க சதி: பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு

ஆய்வின்போது பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: பள்ளிகளில் மதமாற்றம் என புரளியைக் கிளப்பி தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர்களை பொது எதிரிகளாக கட்டமைப்பதற்கான சதி நடைபெறுகிறது என மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோனகன் பள்ளி மற்றும் விடுதியில் அடிப்படை வசதிகள் குறைபாடு மற்றும் கட்டாய மதமாற்ற மத நடைபெறுவதாக ஆளுநரிடம் புகார் அறிக்கை ஒன்றை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் வழங்கியுள்ளனர். இந்நிலையில், மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறுபான்மை ஆணைய உறுப்பினர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு விடுதி மாணவர்கள், பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பீட்டர் அல்போன்ஸ், "சென்னை ராயப்பேட்டை சிஎஸ்ஐ மோனகன் பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். விடுதியில் 56 மாணவர்கள் உள்ளனர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 40 சதவீத பேர் இந்துக்கள், 40 சதவீத பேர் இஸ்லாமியர்கள், 20 சதவீதம் இதர மாணவர்களும் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் திடீரென ஆய்வு செய்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் பல புகார்களை தெரிவித்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தினர் சமூக நலத்துறையின் கவனத்திற்கு இப்பிரச்சனையை கொண்டு வந்ததால், கிருத்திகா ஐஏஎஸ் நேரில் ஆய்வு செய்தார். விடுதிகளில் சில அடிப்படை பணிகளை செய்ய அறிவுறுத்தினார். இதனிடையே, ஆணையத்தின் உறுப்பினர்கள் மீண்டும் ஆளுநரை சந்தித்து புகார் தெரிவித்து, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக புதிய பிரச்சினைகளை கிளப்பி உள்ளனர். குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிகிறது.

கட்டாய மதமாற்றம் என்ற புரளியை கிளப்பி தமிழ்நாட்டை சவக்கிடங்காக மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது. இது தமிழ்நாட்டின் தரமான கல்விச் சேவையை முடக்க செய்யும் முயற்சி. இவையெல்லாம் உள்நோக்கத்துடன் செய்யப்படும் சதி. தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களை யாரோ இயக்குகிறார்கள்.

குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்த விதிகளையும் பின்பற்றவில்லை. குறிப்பிட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தயாரித்து முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம். கட்டாய மதமாற்றம் என யாரும் புகார் அளிக்காத நிலையில், மதமாற்றம் நடைபெறுகிறது என புரளியை பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

கட்டாய மதமாற்றம் என ஒரிரு பள்ளியில் புளியைக் கிளப்பி மாநிலம் முழுவதும் பரவ வைக்க சதி திட்டம் நடைபெறுகிறது. கட்டாய மதமாற்றத்தை தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் எப்போதும் ஏற்காது. தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை எதிரிகளாக கட்டமைப்பதற்கான சதி நடைபெறுகிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x