Published : 14 Sep 2022 12:05 PM
Last Updated : 14 Sep 2022 12:05 PM

அதிமுக அலுவலக மோதல் வழக்கு: மேலாளரிடம் சிபிசிஐடி விசாரணை

கோப்புப்படம்

சென்னை: அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து,சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அதிமுக அலுவலக கலவரம், மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் விசாரணையை தொடங்கவில்லை.பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 7-ம் தேதியன்று, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குறிப்பாக அந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தின் மேலாளரான மகாலிங்கத்திற்கு விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்கு ஆஜரானார்.

சிபிசிஐடி போலீஸார், அதிமுக தலைமை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பல்வேறு கேள்விகளை மகாலிங்கத்திடம் கேட்டு விளக்கம் பெற உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x