Published : 01 Nov 2016 08:47 AM
Last Updated : 01 Nov 2016 08:47 AM

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிர மணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் நேற்று தொடங்கியது. இதையடுத்து, கோயிலிலேயே தங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை தொடங்கினர். வி்ழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது.

முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

யாகசாலை பூஜை

காலை 6 மணிக்கு யாக சாலைக்கு, வள்ளி, தெய்வானை யுடன், சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளினார். 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை, பகல் 12 மணியளவில் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதன்பின், சுவாமி ஜெயந்தி நாதர் யாகசாலையில் இருந்து தங்க சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்து அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, திருஅருணகிரிநாதர் அருளிய வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களை பக்தர்கள் பாடினர். மாலையில் திருவா வடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து, சுவாமி தங்க ரதத்தில் எழுந்தருளி, கிரி வீதி வலம் வந்தார்.

இதுபோல், தொடர்ந்து 5-ம் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. 5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினமே திருச்செந்தூருக்கு பக்தர்கள் வரத் தொடங்கினர். இந்தியா முழுவதும் இருந்தும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர்.

பக்தர்கள் குவிந்தனர்

நேற்று காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலும், நாழிக் கிணறிலும் நீராடி, யாகசாலை பூஜையில் பங்கேற்று சஷ்டி விரதத்தை தொடங்கினர். கோயில் பிரகாரத்தில் ஏராளமானோர் அங்கபிரதட்சணம் செய்தனர். அடுத்த 5 நாட்களும் இவர்கள் கோயிலிலேயே தங்கி விரதம் இருப்பர்.

விழா ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணி கண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x