திருப்போரூர் | திருமணத்துக்கு முதல் நாள் நிகழ்ந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த மணமகன்: உடல் உறுப்புகளை தானம் செய்த உறவினர்கள்

ராஜ்
ராஜ்
Updated on
1 min read

திருப்போரூர்: திருமணம் நடக்க இருந்த நிலையில் திருப்போரூரில் சாலை விபத்தில் நேற்று மணமகன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூரை அடுத்துள்ள கண்ணகப்பட்டு அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன் – கலா தம்பதி. இவர்களது மகன் ராஜ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மின் பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் செப். 12-ம் தேதி (நேற்று) திருப்போரூரில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் கடந்த 9-ம் தேதி, தனது நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு தனது பைக்கில் ஓஎம்ஆர் சாலையில் சென்றுள்ளார். அப்போது திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த தையூர் யோவான் என்பவரின் பைக் எதிர்பாராதவிதமாக ராஜ் பைக் மீது வேகமாக வந்து மோதியது.

இதில் நிலை தடுமாறிய ராஜ் சாலைத் தடுப்பில் மோதினார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர்.

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உடல் உறுப்பை தானம் செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in