Published : 12 Sep 2022 06:20 PM
Last Updated : 12 Sep 2022 06:20 PM

TNEB-ன் 8,000 பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கோப்புப் படம்

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டிஎன்பிஎஸ்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கலைச்செல்வி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2016-ம் ஆண்டு கள உதவியாளர் பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் மூலம் 3170 பேர் தேர்ச்சி பெற்றனர்.இவர்களில் 900 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டனர். தகுதிபெற்ற மற்றவர்கள் நியமிக்கப்படவில்லை.

அதன்பின்னர், 2020-ம் ஆண்டு 2900 கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மீண்டும் அறிவிப்பு வெளியானது. கரோனா பரவல் காரணமாக தேர்வு நடவடிக்கையை தொடரவில்லை. ஆனால் கேங்மேன் பணிக்கு 10000 பணியிடங்களுக்கு தேர்வானவர்களை கள உதவியாளர் பணிகளில் பணியமர்த்தப்பட்டனர்.இதனால் விபத்துக்களில் இவர்கள் பலியாகின்றனர். எனவே 2016-ல் அறிவிப்பாணைப்படி தேர்வாகி, நியமனம் வழங்கப்படாமல் இருப்பவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், "2017-ல் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேர்வானவர்களை, 2020-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்ள காலியிடங்களில் நியமிக்க முடியாது.

மேலும், தற்போது 5032 பணியிடங்களில் கள உதவியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 29,050 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் 8000 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிறப்பித்த உத்தரவில், "தேர்வு நடைமுறை நிலுவையில் உள்ளதால், மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது. அதேசமயம், காலியிடங்களை நிரப்ப தமிழக அரசும், டிஎன்பிஎஸ்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

அதுவரை விதிகளுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்தவர்களை பணி நிரந்தரம் கோர முடியாது என்ற நிபந்தனையுடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், கள உதவியாளர் பணியில் கேங்மேன்களை பணியமர்த்தக்கூடாது என்ற விதியை பின்பற்ற வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x