Published : 12 Sep 2022 03:27 PM
Last Updated : 12 Sep 2022 03:27 PM

அதிமுக அலுவலக சாவி வழக்கு: ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப்படம்

புதுடெல்லி: அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி கலவரம் நடந்ததை அடுத்து, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் அகற்றப்பட்டு, பழனிசாமி வசம் அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், இபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது நீதிபதிகள், " மனுதாரரான ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்கும்படி அவர் எப்படி உரிமை கோர முடியும்? மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன்மூலம் சட்ட நிவாரணம் பெறலாமே?” என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில், “இன்னும் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்தான் உரிமை கோருகிறேன்" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x