Published : 12 Sep 2022 06:56 AM
Last Updated : 12 Sep 2022 06:56 AM

கருத்துகேட்பு கூட்டங்களில் மக்கள் கூறியதற்கு மதிப்பளித்து மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து,அவர்களது ரத்தத்தை உறிஞ்சும்மின்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது. மக்களை வஞ்சித்து அவர்கள் தலையில் மின்னல், இடியாய் விழும் அளவுக்கு உயர்ந்திருப்பது மின் கட்டணமா, அல்லது இந்த அரசின் நிர்வாக திறமையின்மைக்கான கட்டணமா? மக்கள் மீது இந்த அரசு ஏற்றியுள்ள பெருஞ்சுமையான மின்கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாதாமாதம் மின்சார பயன் அளவீடு நடத்தப்படும் என்பதுபோல, தேர்தலின்போது பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியில் அமர்ந்த திமுக, இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது மட்டுமின்றி, மின்கட்டணத்தை அதிகரித்து, தாங்க முடியாத கூடுதல் சுமையை மக்கள் மீதுசுமத்தியுள்ளது. இதற்காக திமுக அரசுக்கு அதிமுக சார்பில் கடும்கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுக அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கு வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகிறது. இதன்மூலம் 1,000 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஒரு ஆண்டுக்கு ரூ.10,000 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ‘சொல்வது ஒன்று, செய்வது ஒன்று’ என திமுக அரசு செயல்படுகிறது. ஒருவேளை இதுதான் ‘திராவிட மாடல்’ போலும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: மின்கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தொடர்ந்துநிர்ப்பந்தித்து வருகிறது என்றும்,கடந்த 8 ஆண்டுகளாக மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதையும் காரணம் காட்டி, கட்டண உயர்வை நியாயப்படுத்த முயற்சிப்பது சரியல்ல. மேலும், 100 யூனிட் இலவச மின்சார சலுகையை விரும்பாதவர்கள், வாரியத்துக்கு தெரிவிக்கலாம் என்று கூறியிருப்பது, மறைமுகநிர்ப்பந்தம் மூலமாக மானியங்களை பறிப்பதாகும். கருத்துகேட்பு கூட்டங்களில் மக்கள் கூறிய கருத்துகளுக்கு மதிப்பளித்து, உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை நிறுத்திவைத்து, நிலைக் கட்டணம் வசூலிப்பதையும், ஆண்டுக்கு 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: அதிமுக ஆட்சியில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டபோது, கருப்புக் கொடியேந்தி, கருப்பு நிற உடை தரித்து வீட்டு வாசலில் நின்றுபோராடிய முதல்வர் ஸ்டாலின்,தனது ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்தி வேடிக்கை பார்ப்பதுமுரணானது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் மின்கட்டணஉயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x