மதுரையில் செப்.23-ல் புத்தகக் காட்சி தொடக்கம்
மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரையில் 2005 முதல் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கம்சார்பில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. புத்தக வாசிப்பைமக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல முதல்வர் உத்தரவிட்டதன்பேரில் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையம் அரங்கில் புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் சார்பில் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன.
இதில் சிறப்பு அம்சமாக குழந்தைகளுக்கு கதை சொல்லுதல், பயிலரங்கம் ஆகிய நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கம், கல்லூரிமாணவ, மாணவியர், பொதுமக்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு, புனைவு, நாடகம், சினிமா, தொல்லியல், நுண்கலை தொடர்பான பயிலரங்கங்கள் நடத்தப்பட உள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திரப் பேச்சாளர்களின் உரை வீச்சுகள், பட்டிமன்றங்கள் தினமும் மாலை நடைபெற உள்ளன. எனவே புத்தகக் காட்சியில் மாணவ. மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும்.
