

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 தேர்வு நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திவருகிறது.
அதன்படி நடப்பாண்டு துணை ஆட்சியர் (18), கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் (13), காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26), வணிகவரி உதவி ஆணையர் (25) உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை சரிசெய்ய ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நிர்வாக காரணங்களுக்காக, வரும் அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 தேர்வு நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.