ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் | தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் நிறுவனங்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு குறித்து ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவளி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "போதுமான காரணங்களை விளக்காமல் தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் விக்ரம் நாத் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர்களான ஆன்லைன் ரம்மி மற்றும் விளையாட்டு நிறுவனங்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விவகாரத்தில் எதிர்மனுதாரர்கள் பதில் அளித்தவுடன் தமிழக அரசு தரப்பில் விளக்க மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை 10 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in