Published : 09 Sep 2022 04:07 PM
Last Updated : 09 Sep 2022 04:07 PM

கிரானைட் வழக்கு | தயாநிதி அழகிரி மேல்முறையீடு - அமலாக்கத் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்

தயாநிதி அழகிரி | கோப்புப்படம்

புதுடெல்லி: சட்டவிரோதமாக கிரானைட் வெட்டியெடுத்த வழக்கு, விசாரணைக்காக சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் தயாநிதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க அமலக்கத் துறைக்கு 2 வார கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோத கிரானைட் கற்களை வெட்டியெடுப்பதாக புகார் எழுந்தது. இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், நாகராஜன், துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது கடந்த 2013-ம் ஆண்டு அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், கீழவளவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த விவகாரத்தில் பண மோசடி, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாகவும் தயாநிதி அழகிரி மீது அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இது தொடர்பான வழக்கு மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக தயாநிதி அழகிரி நேரில் ஆஜராக, மதுரை சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாநிதி அழகிரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, "சிபிஐ நீதிமன்ற சம்மனை ரத்து செய்ய மறுத்தத்தோடு, தயாநிதி அழகிரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மனுதாரர் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து, விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது

இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதி அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பீலா.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி அழகிரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பீனா, "இந்த வழக்கில் எதிர்மனுதாரரான அமலாக்கத் துறை இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை" என வாதிட்டார்.

அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்" என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்த மேல்முறையீட்டு மனு குறித்து அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க 2 வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x