Published : 09 Sep 2022 12:19 PM
Last Updated : 09 Sep 2022 12:19 PM

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொது வாழ்க்கையில் கடைப்பிடித்த கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக நீண்ட காலம் நினைவுகூரப்படுவார்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: "ஐக்கிய ராஜ்ஜியத்தின் (United Kingdom) மிக நீண்ட காலம் ஆட்சியில் இருந்த மாட்சிமை தங்கிய ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

எழுபது ஆண்டுகள், 15 பிரதமர்கள் மற்றும் நவீன வரலாற்றில் பல முக்கியத் திருப்புமுனைகளைக் கண்ட ஓர் ஆட்சிக்குப் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் தனது பொது வாழ்க்கையில் கடைப்பிடித்த கண்ணியம் மற்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக நீண்ட காலம் நினைவுகூரப்படுவார்.

வரலாற்றில் சிறந்த முடியாட்சியர்களில் ஒருவரான ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவினால் வாடும், இங்கிலாந்து அரசக் குடும்பத்தினர், இங்கிலாந்து மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்தினார்.நேற்று (செப்.8) மாலை 6 மணிக்குப் பின்னர் ராணி எலிசபெத் மறைவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை தான் இங்கிலாந்தின் 56-வது பிரதமராக லிஸ் ட்ரஸ்ஸை முறைப்படி நியமித்தார் ராணி எலிசபெத். தன் வாழ்நாளில் அவர் நியமித்த 15வது பிரதமர் லிஸ் ட்ரஸ். வழக்கமாக இந்த நிகழ்ச்சி பக்கிங்காம் அரண்மனையில் தான் நடைபெறும் ஆனால் ராணிக்கு நடப்பதில் சிரமம் இருந்ததால் இந்த முறை ஸ்காட்லாந்தில் நடந்தது. லிஸ் ட்ரஸுடன் கை, கால்கள் நடுங்கியபடி கைத்தடியுடன் மிகவும் சோர்வாகவே ராணி காட்சியளித்தார். இந்நிலையில் ராணி எலிசபெத் நேற்று இயற்கை எய்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x