

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடதமிழக பகுதிகளை ஒட்டி வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 9-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 10, 11, 12-ம் தேதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.
9, 10-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
8-ம் தேதி காலை 8.30 மணியுடன்நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஓமலூரில் 10 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 8 செமீ,விழுப்புரம், திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய இடங்களில்தலா 7 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
9-ம் தேதி லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதைஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில்மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.