Published : 09 Sep 2022 05:18 AM
Last Updated : 09 Sep 2022 05:18 AM

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு | மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - தீர்ப்பின் முழு விவரம்

புதுடெல்லி: தமிழக மின்துறை அமைச்சர் செந்தி்ல் பாலாஜி மீதான பணமோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு தவறானது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இந்தவழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2015 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.

அதையடுத்து, செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது போலீஸார் 3 மோசடி வழக்குகள் பதிவுசெய்தனர். இந்த வழக்கு விசாரணை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதானவழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சென்னை, கரூர்,திருவண்ணாமலை, கும்பகோணம் என அமைச்சர் செந்தில் பாலாஜிக்குசொந்தமான வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது மோசடி நடைபெற்ற காலகட்டங்களில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள், நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள்,பணம் பெற்றதற்கான விவரப் பட்டியல் போன்றவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட 3 குற்ற வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்றது.

இந்த மோசடி விவகாரம் தொடர்பாக பதியப்பட்ட ஒரு வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர் ராஜ்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கைரத்து செய்யக் கோரி சண்முகம்தொடர்ந்த வழக்கை விசாரித்தஉயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாகவும், இருதரப்பும் சமரசமாகச் செல்ல விரும்புவதாகவும் கூறியதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரிபொறியாளர் தர்மராஜ் என்பவர்உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘அமைச்சராக பதவி வகித்தவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அந்த வேலையை தகுதியானவர்களுக்கு கிடைக்க விடாமல் செய் துள்ளார். சமூகத்தை பாதிக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. அரசு தரப்பு இந்த வழக்கில் சமரசத்தை ஏற்றது தவறான நடைமுறை. உயர் நீதிமன்றமும் இதை கருத்தில் கொள்ள வில்லை. எனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்ற வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நசீர், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பொதுவாக சமரசமாக செல்வது என்ற காரணத்துக்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது. அமைச்சர் செந்தி்ல் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு தவறானது என்பதால் அதை நாங்கள் ரத்து செய்கிறோம்.

இந்த வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். அதேபோல மற்ற 2 வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நீக்க தமிழக அரசுமனு தாக்கல் செய்து, அந்த வழக்குகளையும் தொடர்ந்து நடத்த வேண்டும்’’ என அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x