

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில், சோழிங்கநல்லூர் - மாதவரம் 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது.
41.2 கி.மீ. தொலைவுக்கு உயர்மட்ட பாதையாகவும், 5.8 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதையாகவும் அமையும் இந்த தடத்தில் மொத்தம் 48 ரயில் நிலையங்கள் இடம்பெற உள்ளன.
மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வளசரவாக்கம், போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, புழுதிவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் கூட்ரோடு, காமராஜ் கார்டன் தெரு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக இப்பாதை அமைகிறது. இந்த மெட்ரோ ரயில் பாதை அமைக்க, நூற்றுக்கணக்கான தூண்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியபோது, ‘‘மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் உயர்மட்டப் பாதையில் அமைகின்றன. இதற்காக,நூற்றுக்கணக்கான தூண்கள் வரிசையாக அமைக்கப்படுகின்றன. பணிகள் தாமதம் இன்றி நடக்கவும், பணிகளின் நிலவரத்தை உடனுக்குடன் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம்’’ என்றனர்.