

திருநெல்வேலி: "நெல்லை மக்களின் நீண்டகால கோரிக்கையான திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், மேற்கு புறவழிச்சாலை 370 கோடி மதிப்பீட்டில், 3 கட்டங்களாக அமைக்கப்படும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் பேசியது: " திருநெல்வேலி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மக்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மணிமுத்தாறு அணை அருகில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்.
வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, களக்காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில், விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், ராதாபுரத்தில் விளையாட்டரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
நெல்லை மக்களின் நீண்டகால கோரிக்கையான திருநெல்வேலி மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பின்னர், மேற்கு புறவழிச்சாலை 370 கோடி மதிப்பீட்டில், 3 கட்டங்களாக அமைக்கப்படும். இதுபோன்ற சிறப்பான பணிகளை மாதந்தோறும், வாரந்தோறும் ஏன், தினந்தோறும் தொடங்கி செயல்படுத்திக் கொண்டுள்ளோம்.
தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் முழு உடல்நல ஆலோசனை மற்றும் சிகிச்சை குறித்த பராமரிப்புகளுக்காக டிஜிட்டல் பதிவேடு பராமரிக்கப்பட்டு, கர்ப்பிணி தாய்மார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது முழு உடல் பரிசோதனை விவரங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்" என்று அவர் பேசினார்.