

மதுரை: கோயில் விழாக்களில் இனிமேல் இரவு 7 முதல் 10 மணி வரை தான் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி சதி குமார சுகுமார குருப் பிறப்பித்த உத்தரவு: ''ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்கக் கூடாது.
எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ ஃப்ளெக்ஸ் போர்டுகள் வைக்க கூடாது. ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது.
நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ, மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாதுபொது மக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது. நிகழ்ச்சி இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்.'' இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.