Published : 08 Sep 2022 06:46 AM
Last Updated : 08 Sep 2022 06:46 AM

இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை அவசியம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களது படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய-இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கிறது.

அதேபோல, தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வது, அவர்களின் மீன்பிடி வலைகளைச் சேதப்படுத்துவது, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது என இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் இலங்கையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டுத் தந்து, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 9 மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 150 தமிழக மீனவர்களை தூதரக நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க உதவியமைக்காக, எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த செப். 6-ம் தேதி புதுச்சேரியைச் சேர்ந்த மீனவரின் விசைப்படகில் சென்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இலங்கை அரசின் வசம் 23 மீனவர்கள் உள்ளனர். மேலும், 95 மீன்பிடிப் படகுகளும் உள்ளன. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசும், வெளியுறவுத் துறையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x