Published : 08 Sep 2022 04:00 AM
Last Updated : 08 Sep 2022 04:00 AM

நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து நேற்று மீண்டும் இயக்கப்பட்ட நீலகிரி மலைரயில்.

கோவை

ரயில் பாதையில் பாறைகள் விழுந்ததால் தடைபட்ட நீலகிரி மலை ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.

கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கனமழை காரணமாக கடந்த 5-ம் தேதி அதிகாலை கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மலை ரயில் பாதையில் மண், பாறைகள் சரிந்து விழுந்தன.

இதனால், அன்றைய தினம் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான மலைரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. தண்டவாளத்தின் மீது பாறைகள் கிடந்ததால், அவற்றை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். இதனால், நேற்றுமுன்தினம் ரயில் சேவை தடைபட்டது.

சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல ரயில் சேவை தொடங்கியது. ஆனால், சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது.

சென்னையில் இருந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் நேற்று காலை மேட்டுப்பாளையம் வந்தடைந்த பயணிகள் சிலர், தாங்கள் ஏற்கெனவே ரத்து செய்திருந்த மலை ரயில் டிக்கெட்டினை மீண்டும் புதுப்பித்து பயணம் மேற்கொண்டனர்.

இதனால் வழக்கமாக மேட்டுப்பாளையம் ரயில்நிலையத் தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் மலைரயில், நேற்று அரை மணி நேரம் தாமதமாக 7.40 மணிக்கு 120 சுற்றுலா பயணிகளோடு உதகை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x