Published : 07 Sep 2022 11:06 AM
Last Updated : 07 Sep 2022 11:06 AM

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: சிபிசிஐடி போலீஸார் விசாரணை

அதிமுக தலைமை அலுவலகம் | கோப்புப்படம்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11-ம் தேதி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் இன்று (செப்.7) விசாரணை மேற்கொண்டனர்.

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் நேற்று கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "அதிமுக அலுவலக கலவரம், மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணையை தொடங்கவில்லை. குற்றச் செயல் நடந்த இடத்திற்கு வந்து போலீஸார் பார்வையிடாதது அதிர்ச்சியளிக்கிறது. பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் கொள்ளையடித்த நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருடப்பட்ட பொருட்களை மீட்பது தொடர்பாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பிரதான எதிர்க்கட்சியாக தலைமை அலுவலகத்தில் இருந்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் ஆளுங்கட்சிக்கு நன்மை ஏற்படும். தமிழக காவல்துறை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்று தான் தன்னிச்சையான விசாரணை குழு கேட்கப்பட்டது. எனவே, இந்த விவகாரத்தில், சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தும்படி டிஜிபி தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். குறிப்பாக அந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x