Last Updated : 06 Sep, 2022 07:05 PM

 

Published : 06 Sep 2022 07:05 PM
Last Updated : 06 Sep 2022 07:05 PM

11 டெல்டா மாவட்ட வெள்ள அபாய எச்சரிக்கை: மேட்டூர் அணையில் இருந்து 1.10 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

சேலம்: காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீரால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1.10 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், 11 டெல்டா மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீர் வளத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

காவிரியில் 1.10 லட்சம் கனஅடி நீர் திறப்பு: கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை அதிகளவு பெய்து வந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக விநாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மாலை 6.30 மணிக்கு 1.10 லட்சம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, அணையின் 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 87 ஆயிரம் கன அடியும், நீர்மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி என மொத்தம் விநாடிக்கு 1.10 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 400 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாக உள்ளது.

நீர் வரத்து 1.25 லட்சம் கன அடியாக வாய்ப்பு: மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால், எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி வரும் என நீர் வளத்துறை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் 16 கண் மதகுகளை திறந்து விடும் பணியில், ஊழியர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். நீர் வளத்துறை அதிகாரிகள் மேட்டூர் அணைக்கு நீர் வரும் அளவு குறித்து, வெள்ளகட்டுப்பாடு அறையில் இருந்து 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

11 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி உள்பட 11 டெல்டா மாவட்டங்களுக்கு நீர் வளத்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, காவிரி ஆற்றில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்ஃபி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பட்டி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் சிறுவர்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும், கல்வடங்கம், கோனோரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், மீன் பிடிக்க செல்லவும், பரிசல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

படகு போக்குவரத்து நிறுத்தம்: எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிபேட்டைக்கு விசை படகு மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் சென்று வருவது உண்டு. காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இயக்கப்பட்டு வரும் விசைப்படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் 10 கி.மீ. சுற்றி செல்கிறார்கள். மேட்டூர், தங்கமாபுரிபட்டணத்தில் உள்ள காவிரி மேம்பாலத்தில் இருந்து 16 கண் மதகு வழியாக சீறி பாய்ந்து வரும் வெள்ள நீரை, பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x