Published : 06 Sep 2022 04:30 PM
Last Updated : 06 Sep 2022 04:30 PM

காஞ்சிபுரத்தில் அனுமதி பெறாமல் கோயில் புனரமைப்பு பணி: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வீரட்டீசுவரர் கோயிலில் முறையாக அனுமதி பெறாமல், விதிகளை மீறி புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் உள்ள கீழ் படப்பையில் அமைந்துள்ள அருள்மிகு வீரட்டீசுவரர் சுவாமி திருக்கோயிலில் அனுமதி பெறாமல் திருப்பணிகள் நடைபெறுவதுடன், கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தொன்மையான கல்வெட்டுக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ராஜகோபுர திருப்பணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், பல ஆண்டுகளாக பணிகள் நடைபெறுகிறது. மேலும், கோயில் பதிவேடுகள் முறையாக பேணப்படாத நிலையில் தனி நபர்களுக்கு மின் இணைப்பு வழங்க திருக்கோயிலின் செயல் அலுவலரால் சட்டவிரோதமாக ஆட்சேபனையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஜூலை 1-ம் தேதி அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு குறித்து தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x