Published : 06 Sep 2022 01:54 PM
Last Updated : 06 Sep 2022 01:54 PM

சிபிசிஐடி எஃப்ஐஆர்களை இணையதளத்தில் வெளியிடக் கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்

சென்னை: தமிழக காவல் துறையின் இணையதளத்தில் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிடக் கோரிய வழக்கு திரும்ப பெறப்பட்டதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பொதுமக்கள், புகார்தாரர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் காவல் துறை பதிவு செய்யும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், தமிழக காவல் துறையில் 2016-ம் ஆண்டு முதல் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறைப்படி முதல் தகவல் அறிக்கைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால் சிபிசிஐடி பிரிவில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை எனக் கூறி சென்னை நந்தனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "சிபிஐ பதிவு செய்யும் வழக்குகளின் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படும் நிலையில், சிபிசிஐடி பிரிவின் முதல் தகவல் அறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை. சிபிசிஐடி பதிவு செய்யும் வழக்குகள் குறித்த முதல் தகவல் அறிக்கைகள், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதால், அதன் விவரங்களை சம்பந்தப்பட்டவர்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை.

எனவே சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் பல தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.எனவே, சிபிசிஐடி பிரிவை இணையதளத்தில் சேர்த்து அவற்றின் முதல் தகவல் அறிக்கைகளை பதிவேற்றம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், "காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை மட்டுமே இணையதளத்தில் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீவிரமான வழக்குகளை கையாளும் சிபிசிஐடியின் முதல் தகவல் அறிக்கைகளை வெளியிட்டால் அது விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் ஆதாரங்களை கலைக்கவும் வாய்ப்பாகிவிடும். எனவே அந்த முதல் தகவல் அறிக்கைகள் வெளியிடப்படுவது இல்லை" என விளக்கமளித்தார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், "இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தான் அணுக முடியும்.வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதற்காக முதல் தகவல் அறிக்கைகளை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்? என்ற காரணத்தையும் கூறவில்லை என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x