Published : 06 Sep 2022 05:36 AM
Last Updated : 06 Sep 2022 05:36 AM

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவைஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகப் பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் (செப். 6, 7) பெரும்பாலான இடங்களிலும், 8, 9-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

வரும் 8-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று (செப். 5) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் 10 செ.மீ., திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 9 செ.மீ., திருச்சி விமான நிலையம், மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில்பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x