Published : 06 Sep 2022 11:27 AM
Last Updated : 06 Sep 2022 11:27 AM

8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து செய்யாறு அருகே கருப்பு கொடியுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு கிராமத்தில் நேற்று கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

திருவண்ணாமலை

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில், தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு கிராமத்தில் கருப்பு கொடியுடன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக 8 வழிச்சாலை திட்டம் குறித்த பேச்சு மற்றும் கருத்து ஆகியவை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எழவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஆதரவான கருத்து தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 5 மாவட்ட விவசாயிகள், 8 வழிச்சாலையை எதிர்த்து போராட்ட களத்தில் மீண்டும் இறங்கி யுள்ளனர். 8 வழிச்சாலை திட்டத்தில், 47 சதவீத சாலை யானது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமையவுள்ளதால், போராட்டத்தை விவசாயிகள் தொடர்கின்றனர்.

சேத்துப்பட்டு அடுத்த ஆத்துறை, செங்கம் அடுத்த பெரும்பட்டம் ஆகிய கிராமங்களில் கடந்த மாதம் 28-ம் தேதி கருப்பு கொடியுடன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு கிராமத்தில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் தேவன் தலைமை வகித்தார். கருப்பு கொடி ஏந்தி கால்நடைகளுடன் போராட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள், 8 வழிச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும், இத்திட்டத்தை நிறைவேற்ற மாட் டோம் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். இதில், நிர்வாகிகள் சுந்தரி, பச்சையப்பன், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x