

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. இதில், காவிரி விவகாரம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 27 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு நிர்வாகம் தொடர்பாக திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். அரசுப் பணிகளை கவனிக்க பொறுப்பு முதல்வர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த உள்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்துக்கும் ஓ.பன்னீர்செல்வமே தலைமை ஏற்பார் என தெரிவித்திருந்தார்.
முதல்வரின் பொறுப்புகளை ஓ.பன்னீர் செல்வம் ஏற்ற பிறகு அவரது தலைமையில் முதல்முறை யாக தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் முக்கிய துறைகளின் செயலர்கள் பங்கேற்கின்றனர்.
இதில், காவிரி நதிநீர் தொடர்பான உயர்நிலை தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலுக்கான தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்பு களுக்கு தனி அதிகாரி நியமித்தல், அதற்காக அவசரச் சட்டம் இயற்றுதல், தமிழக அரசின் திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் போன்றவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
2 வது கூட்டம்
கடந்த மே 23-ம் தேதி ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. அவரது தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம், ஜூலை 6-ம் தேதி நடந்தது. இதில், தமிழக பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்று 2-வது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடக்கிறது.
அவசரச் சட்டம்
தமிழகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம், வரும் 24-ம் தேதியுடன் முடிவடை கிறது. அதற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்ற தடையால் தேர்தல் தள்ளிப் போகும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது. இதற் காக அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும். அவசர சட்டத் துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப் பார். அதன்பின், சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது, இச்சட்டம் நிறைவேற்றப்படும் என தலை மைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.