Published : 05 Sep 2022 04:20 AM
Last Updated : 05 Sep 2022 04:20 AM

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம்: எடப்பாடி மக்கள் பாதிப்பு

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தேங்கி நிற்கும் மழை நீர். படம்: எல்.பத்மநாபன்.

மேட்டூர்

எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

எடப்பாடி நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் அருகே 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாக்கடை கால்வாய் இல்லாததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

10 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கியிருப்பதால் பாசி பிடித்து பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர். வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதுடன், கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x