Published : 04 Sep 2022 11:39 AM
Last Updated : 04 Sep 2022 11:39 AM

செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் அத்துமீறல்

ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் பக்கம்

சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது.

சமீபகாலமாகவே அரசியல் பிரமுகர்கள், பிரபலங்களின் சமூக வலைதள பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல்கள் பதிவுச் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது. அவரது ட்விட்டர் கணக்கின் பெயரும் மாற்றப்பட்டது.

பெயர் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அப்பதிவில், ”அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. எங்கள் ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தொடர்ச்சியாக கிரிப்டோ கரன்சி குறித்து பதிவுகள் வந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜியை பின் தொடர்பவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

ஹேக் செய்யப்பட்ட பல மணி நேரங்களுக்குப் பின்னரும், செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் மீட்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அவரது முகநூல் பக்கத்தில் இன்று (செப். 4) "அன்புமிகு நண்பர்களுக்கு, நேற்றிரவு எனது ட்வீட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கணினி குற்றப் பிரிவுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும், ட்விட்டர் நிறுவனத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாநில நிர்வாகி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கமும் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x