Published : 15 Oct 2016 12:29 PM
Last Updated : 15 Oct 2016 12:29 PM

நான்கு நாட்களாக செய்திக் குறிப்பு அனுப்பாத அப்போலோ

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து கடந்த 4 நாட்களாக அப்போலோ மருத்துவமனை சார்பில் எவ்வித செய்திக் குறிப்பும் வெளியிடப்படவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 10-ம் தேதிக்குப் பின்னர் அப்போலோ மருத்துவமனை சார்பில் செய்திக் குறிப்பு ஏதும் வெளியாகவில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல், எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்நானி, அஞ்சான் திர்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், கடந்த 10-ம் தேதிக்குப் பின்னர் அப்போலோ மருத்துவமனை சார்பில் செய்திக் குறிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி மருத்துவர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை சென்னை வருவார்கள் எனக் கூறப்படுகிறது.

ரோசய்யா, ரமேஷ் சென்னிதாலா நலம் விசாரித்தனர்:

முன்னதாக தமிழக முன்னாள் ஆளுநர் கே.ரோசய்யா, கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் வெள்ளிக்கிழமை மாலை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு முதல்வர் உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்துச் சென்றனர்.

ரோசய்யா கூறும்போது, "நான் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன். சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சிகிச்சை இன்னும் சில தினங்களில் முடிந்து அவர் விரைவில் பூரண குணமடைவார் என நான் நம்புகிறேன். இது எனது பிரார்த்தனை மட்டுமல்ல அயிரக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும்கூட" என்றார்.

இதேபோல் கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறும்போது, "மருத்துவமனையின் தலைவர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்தேன். அவர் குணமடைந்து வருவதாக தெரிவித்தனர். கேரள மக்கள் சார்பில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x