

திருவையாறு அருகே கொள்ளிடம் கரையோர பகுதியில் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோரங்களில் உள்ள வீரமாங்குடி, அணைக்குடி, பட்டுக்குடி, புத்தூர், வாழ்க்கை உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகள், வயல்களில் தண்ணீர் புகுந்தது.
தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அணைக்குடி பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடிய வழியின்றி குளம்போல தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகியுள்ளன. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும், வீடுகளுக்குள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் புகுந்து விடுகின்றன.
எனவே, இனி வரும் காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தரமான வடிகால் வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றனர்.