Last Updated : 03 Sep, 2022 10:18 PM

 

Published : 03 Sep 2022 10:18 PM
Last Updated : 03 Sep 2022 10:18 PM

வேலுத்தம்பி தளவாய் நினைவிடத்துக்கு மின்வசதி கோரி வழக்கு: குமரி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள வேலுத்தம்பி தளவாய் நினைவிடத்தில் உள்ள உயர் அழுத்த மின்கோபுரம் மற்றும் கழிப்பறைகளுக்கு உடனடியாக மின்வசதி கோரிய வழக்கில் குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தலக்குளத்தைச் சேர்ந்த ஸ்ரீகண்டன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கிபி-1802 காலகட்டத்தில் தளவாயாக இருந்தவர் வேலுத்தம்பி. அவர் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினார். அவரை பிடித்து கொடுப்பவருக்கு ரூ.50 ஆயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டது. ஆங்கிலேயேரிடம் பிடிபடக்கூடாது என்பதற்காக கேரள மாநிலம் மண்ணடி பகவதி அம்மன் கோயிலில் தற்கொலை செய்து கொண்டார். வேலுத்தம்பி தளவாய்க்கு மண்ணடியில் நினைவிடம் உள்ளது.

தலக்குளத்தில் வேலுத்தம்பி தளவாய்க்கு 2009-ல் தமிழக அரசால் ரூ. 38.42 லட்சம் செலவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நினைவிடப் பகுதியில் 2 கழிப்பறை மற்றும் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டது. உயர் மின்கோபுரத்திற்கான மின்கட்டணம் தலக்குளம் ஊராட்சி மன்றம் சார்பில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் உயர் மின்கோபுரம் மற்றும் கழிப்பறைக்கான மின் வசதி திடீரென துண்டிக்கப்பட்டது.

இதனால் வேலுத்தம்பி தளவாய் நினைவிடப் பகுதி போதிய வெளிச்சம் இல்லாமல் உள்ளது. சுற்றலா பயணிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, வேலுத்தம்பி தளவாய் நினைவிடத்தில் உயர் மின்கோபுரம் மற்றும் 2 கழிப்பறைகளுக்கு உடனடியாக மின்வசதி செய்து தருமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிட்டார். பின்னர் மனுவுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், தலக்குளம் ஊராட்சி தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.14 க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x