தமிழகத்தில் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 3, 4, 5 ஆகிய தேதிகளில் பெரும்பாலான மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், நீர்நிலைகள் நிரம்பிவழிகின்றன. இந்நிலையில், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடதமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 3-ம் தேதி (இன்று) ஒருசில இடங்களிலும், 4, 5ஆகிய தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

கனமழை பெய்யும்

3-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 4, 5 தேதிகளில் மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி தருமபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

செப். 5, 6 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in