Last Updated : 17 Oct, 2016 12:23 PM

 

Published : 17 Oct 2016 12:23 PM
Last Updated : 17 Oct 2016 12:23 PM

சேலம், நாமக்கல் அரசு சித்த மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு: நோயாளிகளுக்கு மாத்திரை வழங்குவதில் சிக்கல்

சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 25 இடத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 162 தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்ட அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவு இயங்கி வருகிறது. இவை நீங்கலாக தேசிய ஊரக நலத்திட்டத்தின் (என்ஆர்ஹெச்எம்) கீழ் மாநிலம் முழுவதும் 475 ஆயுஸ் (சித்தா, யுனானி) மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் 275 சித்த மருத்துவமனைகள் உள்ளன.

தேசிய ஊரக நலத்திட்டத் தின் கீழ் இயங்கும் சித்த மருத்துவ மனைகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்ட சித்த மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல், மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அதுபோல் மூலிகை நீராவிக் குளியல், அகச்சிவப்பு கதிர் வீச்சு சிகிச்சை போன்ற சிகிச்சை களும் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட சித்த மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் அனைத்தும் சென்னை டாம்கால் (Tamil Nadu Medical plant farms and Herbal Medicine corporation limited) மூலம் 3 மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சேலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவமனைகளுக்கு மருந்து, மாத்திரைகள் அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால், சித்த மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு மாத்திரைகள் வழங்குவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இதுகுறித்து அரசு சித்த மருத்துவமனை மருத்துவர்கள் சிலர் கூறியதாவது:

டாம்கால் மூலம் சித்த மருத்துவமனைகளுக்கு மருந்து, மாத்திரை வழங்கப்படுகிறது. 3 மாதங்களுக்கு ஒரு முறை தேவையான மருந்து வழங்கப்படும். அல்லது தேவைப்படும் மருந்து, மாத்திரை விவரம் குறித்த பட்டியல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்திற்கு அனுப்பப்படும். பின், அவர்கள் மூலம் மருந்துகள் சித்த மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டாம்கால் மூலம் மருந்து, மாத்திரை அனுப்பப்படவில்லை. அதனால், சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மாத்திரை வழங்க முடிவதில்லை. மழைக் காலம் என்பதால் அதிகளவில் மக்கள் வருகின்றனர். எனினும், மருந்து, மாத்திரை கையிருப் பில்லாததால் நோயாளிக்கு மாத்திரைகள் வழங்க இயலுவதில்லை. சேலம், நாமக்கல் மாவட்டத்தில் இந்த பிரச்சினை உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் இதே பிரச்சினை நீடிக்கிறதா என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ஆங்கில மருத்துவத்துக்கு நிகராக தற்போது சித்த மருத்துவத்தை மக்கள் நாடி வருகின்றனர். இந்நிலையில் சித்த மருத்துவப் பிரிவில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு நிலவுவது வேதனையளிக்கிறது. பொதுமக்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து போதுமான மருந்து, மாத்திரை களை வழங்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து சேலம், நாமக்கல் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வமூர்த்தி கூறும்போது, சித்த மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது. அதில், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நிலவேம்பு கசாயம் தட்டுப்பாடு இல்லை. அதுபோல், டாம்காலில் இருந்து சேலம், நாமக்கல் மாவட்டத்திற்குத் தேவையான பிற மருந்துகளும் அனுப்பப் பட்டுள்ளன. அதனால் இரண்டு, மூன்று தினங்களில் இந்த பிரச்சினை சீரடைந்து விடும்’’, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x