Last Updated : 01 Sep, 2022 06:20 PM

4  

Published : 01 Sep 2022 06:20 PM
Last Updated : 01 Sep 2022 06:20 PM

அனைத்து சாதியினரும் அர்ச்சராக தனிச் சட்டம்: தமிழக அரசுக்கு பயிற்சி மாணவர்கள் வலியுறுத்தல்  

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: தமிழகத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.ரங்கநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 2021-ல் அனைத்து சாதியினரும் அரர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படித்த 22 அர்ச்சகராக மாணவர்கள் உட்பட 57 மாணவர்கள் பல்வேறு கோயில்களில் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனம் கோயில் பணியாளர்களுக்கான பணிவரன்முறை விதிப்படி நடைபெற்றது. இந்த நியமனங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், ஆகமக் கோயில்களுக்கு அர்ச்சகர் நியமனத்துக்கான அறநிலையத்துறை வகுத்த விதிகள் செல்லாது. ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் நியமனம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆகமம், பழக்கம், வழக்கம், மரபுபடியே நடைபெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சிவாச்சார்யார்களுக்கு எதிராக தமிழக அரசு வலுவான வாதத்தை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், சிவாச்சாரியார்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில் வாதிட்டுள்ளார். ‘ஊழியர் விதிகளிலிருந்து ஆகமக் கோயில் அர்ச்சகர்களுக்கு மட்டும் நீதிமன்றம் விதி விலக்கு அளிக்கலாம் என சண்டை தொடங்கும் முன்பே நீதிமன்றத்தில் சரண் அடைந்திருக்கிறார் தலைமை வழக்கறிஞர். அரசின் தலைமை வழக்கறிஞர் அரசின் கொள்கைக்கு நேர் எதிராக பேசியது அதிர்ச்சியளிக்கிறது.

இதிலிருந்து தமிழகத்தில் அறநிலையத் துறையின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சமத்துவக் கொள்கைகளுக்கு எதிரானவர்களாகவும், காவி சிந்தனையின் காவலர்களாகவும் உள்ளது தெரிகிறது. இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் எவ்வித விளக்கமும் அளிக்காதது அதிர்ச்சியளிக்கிறது.

இதனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்வதற்கு எதிரான வழக்கில் நடந்த தவறுகள் குறித்து விசாரணை நடத்தி தவறுக்கு காரணமானவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நீட் விவகாரத்தை போல் அர்ச்சகர் விவகாரத்திலும் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். இதற்காக தமிழக அரசு சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x