Published : 18 Oct 2016 09:43 AM
Last Updated : 18 Oct 2016 09:43 AM

பெட்ரோல் பங்க்குகளில் சேமிக்கும் நிலத்தடி தொட்டிகளுக்கும் வரி: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகரப் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் நிலத்துக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ள எரிபொருள் சேமிப்பு தொட்டிகளுக்கும் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னை மாநகராட்சி முனி சிபல் சட்டம் 1919-ன் படி, கட்டிடம் அமைந்துள்ள நிலப்பரப்பு மற்றும் அதன் மீதான கட்டிடங்கள், திறந்தவெளி ஆகியவற்றைக் கொண்டு சொத்து வரி மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் நிலத்துக்கடியில், ஆட்கள் இறங்க முடியாத கட்டமைப்புகள் இருந் தாலும் அவற்றுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.

சென்னையில் 100-க்கும் மேற் பட்ட பெட்ரோல் பங்க்குகள் இயங்கி வருகின்றன. இவற்றில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள், நிலத்துக்கடியில் கட்டப்பட்டுள்ள தொட்டிகளில் சேமித்து வைத்து, விநியோகிக்கப்படுகின்றன. அந்த கட்டுமானம் வணிக ரீதியில் பயன் படுத்தப்படுவதால், அவற்றுக்கும் சொத்து வரி விதிக்கலாம் என மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, பெட்ரோல் பங்குகளில் நிலத்தடி சேமிப்பு தொட்டிகளுக்கும் சொத்து வரி விதிக்க அனுமதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளில் அதற்கான அம் சங்கள் இல்லை. அதனால் அச்சட்டத்தின் 100-வது பிரிவில், நிலத்தடி சேமிப்பு தொட்டிகளுக் கும், கொள்திறன் அடிப்படையில் சொத்து மதிப்பீடு செய்ய வகை செய்யும் வகையில், சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, சட்டத்திருத்தம் செய்து வெளியிட மாநகராட்சி நிலைக்குழு (வரி விதிப்பு மற்றும் நிதி) அரசுக்கு கருத்துரு அனுப்ப இருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை, மாநகராட்சிக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x