Published : 29 Aug 2022 09:22 PM
Last Updated : 29 Aug 2022 09:22 PM

டேன்டீ-யில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணிக்கொடை பலன்களுக்கு ரூ.29.38 கோடி நிதி: முதல்வர் உத்தரவு

முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம்

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 1.10.2017 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் வழங்கிட ரூ.29.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் (டேன்டீ) பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.10.2017 முதல் வழங்கப்படாமல் இருந்த பணிக் கொடை பலன்கள் மற்றும் இதர பலன்கள் அளிப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 23.05.2022 அன்று தமிழக முதல்வர் ஸ்டாலின், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது குன்னூரில் அமைந்துள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். மேலும், டேன்டீ கழகத்தை லாபம் ஈட்டக்கூடியதாகவும், செம்மையாகவும் நடத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக கடந்த 1968-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ‘அரசு தேயிலைத் திட்டத்தை’ நிறுவியது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய 2445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்) கடந்த 1976-ஆம் ஆண்டு முதல் நிரந்தர வேலைவாய்ப்பு, தங்குவதற்கு வீடு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டது. இவ்வாறு குடியமர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு நபர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டு வருவதோடு அவர்களின் வாரிசுதாரர்களுக்கு அதிக இலை வரத்து உள்ள பருவ காலங்களில் தற்காலிக பணியும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது டேன்டீயில் 3600 நிரந்தரத் தொழிலாளர்களும், 220 தொடர் தற்காலிக தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், டேன்டீ கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வுகால பயன்களை வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.10.2017 முதல் பணிக் கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் வழங்க தேவையான 29.38 கோடி ரூபாயை விடுவித்து முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இத்தொகையினை வழங்குவதன் மூலம் 1066 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் 101 ஓய்வு பெற்ற ஊழியர்கள் பயன் பெறுவர். மேலும், தற்பொழுது பணிபுரிந்து வரும் 3820 நிரந்தர தொழிலாளர்களும், 212 ஊழியர்களும் பயன்பெறுவர். ஓய்வு பெற்றபின் பயனாளிகள் பங்களிப்பை அளிக்கத் தயாராக இருக்கும் பணியாளர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும்.இந்தக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.இராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x