கணவரைப் பிரிந்த, இழந்த பெண்களின் குழந்தைகளுக்கு தாய்வழி சாதிச் சான்று தர ஆய்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

கணவரைப் பிரிந்த, இழந்த பெண்களின் குழந்தைகளுக்கு தாய்வழி சாதிச் சான்று தர ஆய்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
Updated on
1 min read

புதுச்சேரி: கணவரை இழந்தோ, பிரிந்தோ வாழும் பெண்களின் குழந்தைகளுக்கு தாயின் வழி அடிப்படையில் சாதிச் சான்று தர மத்திய அரசிடம் கோரி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் ரங்கசாமி கூறினார்

புதுச்சேரி சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய சுயேட்சை எம்எல்ஏ நேரு கூறியதாவது: "புதுச்சேரியைச் சேர்ந்தோர் தற்காலிகமாக வெளியூர் சென்று படித்துத் திரும்பினால்கூட அவர்களுக்கு குடியிருப்பு சான்று கிடைப்பதில்லை. கணவரை இழந்தோ, பிரிந்தோ தனது குழந்தைகளுடன் வாழும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சாதிச் சான்று கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

இப்பெண்களின் குழந்தைகளுக்கு தாயின்வழி சாதிச் சான்று தர நடவடிக்கை எடுக்கப்படுமா" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, "ஐந்து ஆண்டுகள் புதுச்சேரியில் இருந்தால் குடியிருப்பு சான்று தரப்படும். தற்காலிகமாக படிக்க வெளியூர் சென்றாலும் சான்றிதழ் தருகிறோம். சாதிச் சான்றிதழைப் பொருத்தவரை மத்திய அரசு வழிகாட்டுதல் படி தந்தையின் சாதி அடிப்படையில்தான் தரப்படுகிறது.

கேரளத்தில் தற்போது தந்தை மட்டுமில்லாமல் தாயின் சாதிச் சான்று அடிப்படையிலும் தருகிறார்கள். அதை ஆய்வு செய்து வருகிறோம். மத்திய அரசிடம் கோரி ஆய்வு செய்து அவ்வாறான சான்றிதழ் தருவோம்" என்று முதல்வர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in