Published : 29 Aug 2022 12:52 PM
Last Updated : 29 Aug 2022 12:52 PM

தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், " தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக அரசு அறிவித்துள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் மூலம் தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனங்களை மேற்கொள்ளவுள்ளது.

தமிழக அரசு கோயில்களில் அர்ச்சர்களை நியமிக்க அனுமதிக்கக்கூடாது. கோயில் நிர்வாகம்தான் அர்ச்சகர் நியமனம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் .மேலும், கோயில் சொத்துகளின் உரிமையாளராக அரசு இருக்கக்கூடாது. சமயம் சார்ந்த செயல்படுகளில் அரசு தலையிடக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மனுக்கள் நிலுவையில் உள்ளன? அப்படியிருக்கும்போது, தற்போது என்ன நிவாரணம் கோருகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது, மனுதாரர் தரப்பில், " அர்ச்சகர் நியமனம் தொடர்பாக எந்த மனுவும் நிலுவையில் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், "கோயில் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற வழக்குதான் நிலுவையில் உள்ளது" என்று தெரிவித்தனர்

அப்போது வாதிட்ட சுப்பிரமணிய சுவாமி, "தற்போது தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் அர்ச்சகர்களை நியமிப்பதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அர்ச்சகர்கள் நியமனம், நிர்வாகம் ஆகியவற்றை கோயில் நிர்வாகமே மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், "தற்போதைய நிலையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கும் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். அப்போது, மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி, "இந்த வழக்கில் முடிவு வரும் வரை அர்ச்சகர் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழகம், குஜராத், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என தயானந்த சரஸ்வதி உள்ளிட்ட பலர் தொடர்ந்த வழக்குடன் இணைத்து, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் விசாரிக்கப்படும் எனக்கூறி விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x