'தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை யோசிக்க வேண்டும்' - ஆர்.பி.உதயகுமாருக்கு டிடிவி பதில்

'தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதை யோசிக்க வேண்டும்' - ஆர்.பி.உதயகுமாருக்கு டிடிவி பதில்
Updated on
1 min read

சென்னை: "மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அமமுக பொதுச் செயலாளலர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்," கடந்த கால கசப்புணர்வா?அல்லது எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நமக்கு புகட்டிய லட்சிய உணர்வா? எதைப்பற்றி இப்போது சிந்திக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டும்.

மக்கள் விரோத தீய சக்தி கூட்டத்தை அதிகாரத்தில் இருந்து அகற்றும் பணியைத்தான் யோசிக்க வேண்டும். இதனை உணர்ந்து செயல்பட்டால் நல்லது என்பதை அண்ணன் டிடிவி என்று பழைய பாசத்தோடு சொல்லும் தம்பிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உயகுமார், "சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போதெல்லாம் பரிந்துரை செய்த டிடிவி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த பன்னீர்செல்வம் நடத்திய சித்து விளையாட்டுகளில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறியது.

ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், தற்போது அதே குடும்பத்தை நேரில் சந்தித்து கட்சியில் இணைவதற்கு அழைப்பு விடுப்பேன் என்கிறார்.

பன்னீர்செல்வம் சிரிப்பில், அத்தனை அசுர குணங்களை மனதில் வைத்துக்கொண்டு, வெளித்தோற்றத்தில் காட்டும் மாயத் தோற்றம், நிச்சயம் ஒரு நாள் மக்கள் அறிவார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை தனக்கும், தன் பிள்ளைக்கும் குடும்ப சொத்தாக வேண்டும் என்பதற்காக, அவர் நடத்தும் நாடகம் தான் அதிமுக ஒற்றுமையாக வர வேண்டும் என்ற தற்போதைய நாடகம்" என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in