

சென்னை: தமிழக அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயின்றவர்களையும் டிஎன்பிஎஸ்சி சர்வேயர் பணிக்கான தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு துறைகளில்1,089 சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூலை 29-ம் தேதி வெளியிட்டது.
மத்திய அரசின் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் (NCVT) பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சி நிறுவனத்தில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள், இப்பதவிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அப்பணிக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டித்து, தமிழக அரசின் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைத்து தமிழக மாணவர்களையும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்களாக திருத்தம் செய்து, டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.
இளைஞர்களின் எதிர்காலம்
லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் அரசு வேலைக்காக ஏங்கித் தவிக்கும் இன்றைய சூழலில், டிஎன்பிஎஸ்சி இனி வரும் காலங்களில் நடத்தும் தேர்வுகளை மிகுந்த கவனத்தோடு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேர்வு அறிவிப்பாணையை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதிமுக முன்னாள்அமைச்சர் ஓ.எஸ் மணியன்வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.