வருமான வரி வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

வருமான வரி வழக்கு: ஜெயலலிதா, சசிகலா ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஜூன் 9-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 – 92 மற்றும் 1992 – 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகளுக்கு எதிராக ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீடுகள் சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதது குற்றம் என்று கூறி, இந்த வழக்கை நான்கு மாதங்களுக்குள் விசாரணையை நடத்தி தீர்ப்பை வழங்க கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஏப்ரல் 3-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை சுட்டிக்காட்டி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரப்பட்டது.

தேர்தல் நேரம் என்பதால் இப்போது ஆஜராக உத்தரவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள், தேர்தல் முடிந்ததும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன் பின்னரும், ஜெயலலிதா, சசிகலா ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஜூன் 9-ம் தேதி ஆஜராக, சென்னை - எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in