காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை - மேட்டூருக்கு நீர்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிக்கும்

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 8,000  கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பிரதான அருவி அருகே பாறைகளுக்கு இடையே நிறைந்து ஓடும் தண்ணீர்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 8,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் பிரதான அருவி அருகே பாறைகளுக்கு இடையே நிறைந்து ஓடும் தண்ணீர்.
Updated on
1 min read

சேலம்/தருமபுரி: கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று (28-ம் தேதி) விநாடிக்கு 1,20,000 கனஅடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, காவிரி கரையோர மாவட்டங்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து வருவதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 25-ம் தேதி முதல் 16 கண் மதகு வழியாகவும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 60,000 கனஅடியாகவும், மாலை 5 மணியளவில் விநாடிக்கு 80,000 கனஅடியாகவும் அதிகரித்தது. நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தததை அடுத்து, இரவு 8 மணியளவில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 95,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அதில், அணையின் மின் நிலையங்கள் வழியாக, 23,000 கனஅடி நீரும், 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 72,000 கனஅடி நீரும் என காவிரியில் மொத்தம் 95,000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இதனிடையே, மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 1,20,000 கனஅடியாக அதிகரிக்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மேட்டூர் அணை நீர் வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு இன்று (28-ம் தேதி) காலை விநாடிக்கு 1,20,000 கனஅடியாக அதிகரிக்கும்.

எனவே, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்பட காவிரி கரையோர மாவட்டங்களில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது என்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. எனவே, காவிரியில் நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மேட்டூர் அணையில், நீர் வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் நிலவரம்

தருமபுரி ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 8 மணி அளவீட்டின்படி 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாகவும் உயர்ந்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in