Last Updated : 04 Oct, 2016 08:48 AM

 

Published : 04 Oct 2016 08:48 AM
Last Updated : 04 Oct 2016 08:48 AM

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் கணக்கில் வராத வருமானம் ரூ.3 ஆயிரம் கோடி: ரூ.1,400 கோடி வரி வசூல் ஆகும் என தகவல்

வருமானம் தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் வெளியானது

தமிழகம் மற்றும் புதுவையில் தாமாக முன்வந்து வருமானம் தெரி விக்கும் திட்டத்தின் கீழ், ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் வெளி வந்துள்ளது. இதன் மூலம், ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி வசூல் ஆகும் எனத் தெரிகிறது.

கணக்கில் காட்டப்படாத கறுப் புப் பணத்தை வெளிக்கொணரும் நோக்கில் ‘வருமானம் தெரிவிக்கும் திட்டம்-2016’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டம் கடந்த ஜூன் 1-ம் தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று முடிவடைந்தது. அதற்குள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தங்களிடம் உள்ள கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் அசையா சொத்துகளை தாமாக முன்வந்து தெரிவிக்க வேண்டும். மேற்கொண்டு கால நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுவையில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத பணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து, வருமானவரித் துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்த வருமானம் தெரிவிக்கும் திட்டத் தின் கீழ், தமிழகம் மற்றும் புதுவை யில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் வெளிவந்துள்ளது. இவ்வாறு காட்டப்பட்ட வருமானத்துக்கு 30 சதவீதம் வரி, 7.5 சதவீதம் கூடுதல் வரி மற்றும் 7.5 சதவீதம் அபராதம் என விதிக்கப்படும். இதன் மூலம், ஆயிரத்து 400 கோடி ரூபாய் வரி வசூல் ஆகும் என தெரிய வந்துள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் வருமானவரியை மூன்று தவணைகளில் செலுத்தலாம். இதன்படி, கட்டவேண்டிய மொத்த வரியில் 25 சதவீதத்தை வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள்ளும், 25 சதவீதத்தை 2017 மார்ச் 31-ம் தேதிக்குள்ளும், எஞ்சியுள்ள 50 சதவீதத் தொகையை 2017 செப்டம்பர் 30-ம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.

மேலும், தாக்கல் செய்யப்படும் வருமானம் மற்றும் சொத்து குறித்த விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைத்துக் கொள்ளப் படும். அத்துடன், இதுகுறித்து வருமானவரித் துறையினர் எவ்வித விசாரணையும் மேற் கொள்ளமாட்டார்கள்.

வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால்..

அதேசமயம் வரி ஏய்ப்பு செய்திருப்பவர்கள் கண்டுபிடிக் கப்பட்டால் அவர்களிடம் வரி, வட்டி, அபராதம் ஆகியவை வசூலிக்கப்படுவதோடு அவர்கள் மீது குற்ற வழக்கு தொடர்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x