Published : 24 Oct 2016 05:54 PM
Last Updated : 24 Oct 2016 05:54 PM

திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வாசன் பங்கேற்பு

திமுக அழைப்பு விடுத்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுக்கிறது. இந்நிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. ஆனாலும் தமிழக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் காவிரி பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தமாகா சார்பில் நானும், மூத்த தலைவர்களும் பங்கேற்க இருக்கிறோம்.

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி பிரச்சினையில் நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக நடக்கும் இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும்.

வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு தமாகாவின் நிலைப்பாட்டை அறிவிப்போம்'' என்று வாசன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x