Published : 27 Aug 2022 06:15 AM
Last Updated : 27 Aug 2022 06:15 AM

கோயம்பேட்டில் இருந்து செல்லும் 50% பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றி இயக்க திட்டம்

செ. ஆனந்த விநாயகம்

சென்னை: சென்னை பெருநகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலில் பேருந்துகளை இயக்குவது போக்குவரத்துத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

அதிக நெரிசல் மிக்க பகுதியான பிராட்வேயில் இருந்துதான் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெளியூர் பேருந்துகள் இயங்கி வந்தன. அங்கு நிலவிய போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே, சென்னை கோயம்பேட்டில் 37 ஏக்கர் பரப்பளவில் ரூ.103 கோடி செலவில் பேருந்து முனையம் கட்டப்பட்டது.

கடந்த 2002-ம் ஆண்டு முதல் செயல்படும் இந்த முனையத்தை நாள்தோறும் சுமார் 5 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு மாநகரப் பேருந்து நிறுத்தம், வாகன நிறுத்தம், அருகிலேயே ஆம்னி பேருந்து நிலையம் என பல்வேறு அம்சங்களும் இருப்பதால் அனைவரின் போக்குவரத்து தேவையையும் நிறைவேற்றும் ஒருங்கிணைந்த பேருந்து முனையமாக செயல்பட்டு வருகிறது.

தற்போது இங்கும் போக்குவரத்து நெரிசல் அதிகமானதால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.314 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

அங்கு 250 பேருந்துகள், 270 கார்கள், 3500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி மட்டுமின்றி, 6 ஏக்கர் பரப்பளவில் மாநகர பேருந்துக்கான நிலையமும் இடம்பெறுகிறது.

இந்த நிலைய கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இங்கு, மாநகர பேருந்துகளுக்கான நிலையத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. விரைவு பேருந்து நிலையப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன.

பணிகள் முடிவடைந்தவுடன் கோயம்பேட்டில் உள்ள பேருந்துகளை இங்கிருந்து இயக்குவதற்கான ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. அதாவது 50 சதவீத பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து சென்று வரும் வகையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: கோயம்பேடு முனையத்தில் நாள் ஒன்றுக்கு 400 மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன. மேலும் 354 விரைவுப் பேருந்துகள், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மூலம் 1,234 பேருந்துகள், கும்பகோணம் போக்குவரத்துக் கழகம் மூலம் 134 பேருந்துகள் என பல்வேறு போக்குவரத்துக் கழகங்களின் சுமார் 2 ஆயிரம் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.

இவற்றில் கோயம்பேட்டில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 50 சதவீத வெளியூர் பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், சேலம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்கப்படும் எனத் தெரிகிறது.

அங்கு அமைக்கப்படும் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து 300 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறது. குறிப்பாக தாம்பரம், கோயம்பேடு, கிண்டி, பூந்தமல்லி, ஆவடி, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் அதிக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

சென்னையில் இருந்து வண்டலூர் வரை செல்லும் பேருந்துகளை கிளாம்பாக்கம் வரை நீட்டிக்க உள்ளோம். குறிப்பாக தாம்பரத்தில் இருந்து 60 பேருந்துகளை மாற்றி இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x