Published : 26 Aug 2022 01:00 PM
Last Updated : 26 Aug 2022 01:00 PM

'திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறது' - முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: "அனைவரும் பாராட்டக்கூடிய, அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. திராவிட மாடல் அரசானது இன்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அரசாக இருக்கிறது. நம் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தைத்தான் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. மாநில சுயாட்சி என்ற தத்துவமும் திராவிட இயக்கம் கொடுத்த கொடைதான்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள வழங்கினார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " நேற்று கோபிசெட்டிப்பாளையம் சென்றபோது, விவசாயிகள் நெல்மணிகளைக் கொடுத்து நீங்கள் அறிவித்த திட்டங்களால் விளைந்தது என்று கூறி நன்றி தெரிவித்தனர். இதைவிட மகிழ்ச்சி என்ன இருக்கமுடியும்.

டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கடைமடை வரை தண்ணீர் செல்ல கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டது. நெல் சாகுபடி அதிகமாக இருப்பது தமிழ்நாட்டின் வளத்தைக் காட்டுவதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளத்தை அது மேலும் வளப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் சட்டபூர்வமான அங்கீகாரம் கொடுத்துள்ளது. ஆலயங்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுபவர்கள் அதற்கான பயிற்சியை பெற்றிருந்தால் போதும். இதில் சாதி என்பது ஒரு அளவுகோலாக இருக்கக்கூடாது.

இத்தகைய சமூக நீதியை காக்கக்கூடிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று சிலர், நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்தனர். அதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தந்தை பெரியாரும், தலைவர் கலைஞரும் இருந்திருந்தால் மகிழ்சியடைந்திருப்பார்கள். இது நம் கொள்கைக்கு கிடைத்திருக்கக்கூடிய வெற்றி.

வேளாண் திட்டங்களாக இருந்தாலும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதாக இருந்தாலும் அனைத்திலும் தொலைநோக்கோடு நாம் முடிவெடுத்து செயல்படுவதால்தான் இத்தகைய வெற்றி சாத்தியமானது. அனைவரும் பாராட்டக்கூடிய, அனைவருக்கும் வழிகாட்டக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது.

திராவிட மாடல் அரசானது இன்று இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய அரசாக இருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, இல்லம் தேடி கல்வி, இல்லம் தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை பல்வேறு மாநில அரசுகளும் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. நம் இடஒதுக்கீடு என்ற சமூகநீதி தத்துவத்தைத்தான் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.

மாநில சுயாட்சி என்ற தத்துவமும் திராவிட இயக்கம் கொடுத்த கொடைதான். 50 ஆண்டுகால தமிழ்நாட்டின் வளர்ச்சி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் சிந்தனையில் உருவான திட்டங்களின் வளர்ச்சிதான்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x